நாஞ்சில் மீதான தாக்குதல்-ஆளுநரிடம் வைகோ புகார்
குளித்தலையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச இருந்தபோது திமுக எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் ஒரு கும்பல் மேடையை அடித்து நொறுக்கியது.
மேடையில் இருந்த நாஞ்சில் சம்பத் உட்பட மதிமுகவினர் தாக்கப்பட்டனர். பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக திமுக எம்எல்ஏ மாணிக்கம் உட்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்று ஆளுநர் பர்னாலாவை இன்று வைகோ நேரில் சந்தித்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் ஆளுநரைக் கேட்டுக் கொண்டு புகார் மனுவையும் வழங்கினார்.
இந்த நிலையில், வருகிற 28ம் தேதி குளித்தலையில் வைகோ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த செய்தியை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.