குற்றாலத்தில் விஞ்ச் அமைக்க பரிசீலனை-ஸ்டாலின் தகவல்
குற்றாலம்: பழனியில் இருப்பதைப் போல குற்றாலத்திலும் விஞ்ச் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலமான குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 1 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றில் மெயின் அருவி தங்கும் விடுதி முன்பு ரூ.9 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் சிமிண்ட தளம், ஐந்தருவியில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் குளிக்கும் பகுதிக்கு செல்லும் ஒரு வழி பாதை,
குற்றாலம் பஸ் நிலையம் அருகில் ரூ.24.75 செலவில் கட்டப்பட்டு வரும் வணிக வாளகம் மற்றும் தங்கும் விடுதி, தென்காசி தங்கும் விடுதிக்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் சுற்று சுவர் ஆகிய பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குற்றாலத்தில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அவை அனைத்தும் இந்த ஆண்டு சீசனுக்குள் நடந்து முடிநது விடும்.
குற்றாலம் மலைப்பகுதியில் விஞ்ச் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.
முன்னதாக, ரூ.29 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் நடைபெற்றது.
இதை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், பல ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாது என்று நினைத்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒனேக்கால் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1,334 கோடி செலவில் இம்மாதம் 26ம் தேதி முதல்வரால் அடிக்கல் நாட்டப்படுகிறது.
வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.616 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2007ல் நடந்தது. 3 ஆண்டுகளில் இது முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 2 ஆண்டுகளில் நிறைவேற்றினால் அதிகாரிகளுக்கு பரிசு தருவதாக முதல்வர் அறிவித்தார். தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
1 வருடம் 11 மாதங்களிலேயே இத்திட்டம் நிறைவேறும் நிலையில் உள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகள் பதவிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நினைத்து பார்ப்பதில்லை. ஆனால் திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது.
மக்களின் தாகம் தீர்க்கும் குடிநீர் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே மக்களின் தாகம் தீர்க்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. மக்கள் நலனில் திமுக அரசு காட்டி வரும் அக்கரைக்கு இதுவே சான்றாகும். எனவே அரசுககு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.