இந்தோனேஷிய பூகம்பத்தால் நாகப்பட்டிணத்தில் சுனாமி புரளி
நாகப்பட்டினம்: இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு அது தமிழக கடல் பகுதியையும் தாக்கப் போவதாக நாகை மாவட்டத்தில் புரளி கிளம்பியது.
இதையடுத்து நாகப்பட்டிணம் மாவட்ட கடலோர பகுதி மக்கள் பீதியில் கடலோரங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் சுமத்ரா தீவின் அச்சே பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது.
ஆனால், இந்த பூகம்பம் கடல் பகுதியில் அல்லாமல் நிலத்தில் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படவில்லை.
ஆனாலும் இந்தோனேசிய பூகம்பத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டுவிட்டதாக நாகையில் புரளி கிளம்பியது. நாகப்பட்டிணம் ஆரியநாட்டு தெரு பகுதிக்கு வந்த இரு போலீசார் தான் இந்த புரளிக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
சுனாமி அபாயம் ஏற்பட்டுவிட்டதால் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள் என மக்களை இவர்கள் எச்சரிக்கவே, பீதி பரவியது. அச்சமடைந்த மீனவர்களும் பொது மக்களும் உடனுக்குடன் கடலோரப் பகுதியில் உள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் தரவே அது மாவட்டம் முழுவதும் பரவிவிட்டது.
இதனால் நேற்று இரவு வரை நாகப்பட்டிணத்தில் பெரும் பீதி நிலவியது.