5 தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் 5 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது.
இம் மாதம் வெளியாகவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டங்கள் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது.
சில தினங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடித்ததில் தமிழகத்தில் நீண்ட நாள் கிடப்பட்டில் போடப்பட்டுள்ள 4 முக்கிய ரயில்வே திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றை ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து அவர் கோரிய திட்டங்கள் தவிர மேலும் ஒரு திட்டத்துக்கும் மத்திய அமைச்சரை ஒப்புதல் தந்துள்ளது.
விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை அகல ரயில்பாதை, பழனி-ஈரோடு புதிய ரயில் பாதை, சென்னை-கடலூர் புதிய ரயில்பாதை, அத்திப்பட்டு-புத்தூர் புதிய ரயில்பாதை மற்றும், மதுரை-போடி அகலப் பாதையாக்கும் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து, துவாரகாவுக்கு புதிய ரயில் விடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய திட்டக் கமிஷன் நிராகரித்து வந்தது. இதையடு்த்து சமீபத்தில் டெல்லி சென்ற நிதியமைச்சர் அன்பழகன் மூலமாக திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவிடம் முதல்வர் கருணாநிதி இத் திட்டத்தை வலியுறுத்தினார்.
இதையடுத்து இத் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டு அமைச்சரவையும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, ரூ.822 கோடி செலவாகும். இதில் பாதி தொகையை மாநில அரசே ஏற்க வேண்டுமென்றும் திட்டக் கமிஷன் கூறி வந்தது. ஆனால், இதை தமிழகம் ஏற்க மறுத்துவிட்டது. இப்போது மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிலேயே இத் திட்டம் நிறைவேறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் எண்ணூர் துறைமுகம் முதல் புத்தூர் வரையில் தனியான சரக்குப் பாதையை அமைக்க வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.