சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் வெட்டிக் கொலை
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 வக்கீல்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ரஜினிகாந்த். இவருக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.
சமீபத்தில் நடந்த எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ரஜினிகாந்த் தரப்பில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வெற்றி பெற்ற குழுவினரை சரிவர செயல்படவிடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் வழக்கறிஞர் ரஜினிகாந்த்தை சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் கழுத்து, வாய், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ரஜினிகாந்த்.
இந்த சம்பவத்தின்போது சுந்தரராஜன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. அவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
5 பேர் கைது:
கொலையாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்களின் தீவிர வேட்டையில், வழக்கறிஞர் துரைக்கண்ணன், வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், செம்பியத்தைச் சேர்ந்த கராத்தே பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ரஜினிகாந்த்தை வெட்ட துரைக்கண்ணன் பயன்படுத்திய, ரத்தக்கறை படிந்த நீண்ட பட்டாக் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் தவிர மேலும் 2 பேரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
வெட்டிக் கொல்லப்பட்ட வக்கீல் ரஜினிகாந்த், முன்னாள் திமுக எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் சகோதரர் மகள் லலிதாவைத்தான் மணந்துள்ளார். ரஜினிகாந்த் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டதும் லலிதா துடித்துக் கதறினார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் மிக்க எழும்பூர் கோர்ட் வளாகத்தில் நடந்துள்ள இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்திற்கு அருகில்தான் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தம், வக்கீல் ஒருவரால் தாக்கப்பட்டார் என்பதும் நினைவிருக்கலாம். இதையடுத்து புறக் காவல் நிலையமும் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications