நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: ராமதாஸ்
சமீபத்தில் விஜய்காந்த் அளித்த பேட்டியில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் சாதி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டோம் என்றும் கூறியிந்தார்.
மேலும் ஊழல், சாதி, மதத்தை சார்ந்த கட்சிகளுடன் சேர மாட்டோம் என்றார்.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த செயற்குழுவில் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.
நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.
அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.
புதுச்சேரியில் நடைபெற்ற செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்க்கமான முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் இந்த முடிவுகளில் இருந்து விலகி செல்லமாட்டோம்.
இது ஒருபுறம் இருக்கையில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கட்சிகளை போன்றதல்ல பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழர்கள் அனைவராலும் அனைத்து தரப்பு மக்களாலும் ஆதரித்து அரவணைக்கப்படும் மாபெரும் அரசியல் இயக்கமாக பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து நிற்கிறது.
இந்த வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள், இக்கட்சியை சாதி கட்சி என்று முத்திரை குத்துவதற்கு இதுவரையில் படாதபாடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கின்றன என்று கூறியுள்ளார் ராமதாஸ்.