சென்னையில் ரூ. 4,500 கோடியில் ரெனால்ட்-நிஸ்ஸான் புதிய கார் தொழிற்சாலை
சென்னை: சென்னை அருகே ரூ. 4500 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை அருகே ஓரகடத்தில், பிரான்ஸின் ரெனால்ட் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனத்தினரால் ஒருங்கிணைந்த மோட்டார் வாகனத் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. ரூ. 4500 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை தொடங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் நிறுவனங்களுக்கு தலா 50 சதவீத பங்குகள் இருக்கும். ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் இங்கு தயாரிக்கப்படும்.
இந்த நிறுவனத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
புதிய கார் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் முதல்வர்க கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் ரெனால்ட் செயல் துணைத் தலைவர் பாட்ரிக் பெலாட்டாவும், நிஸ்ஸான் செயல் துணைத் தலைவர் கார்லோஸ் டாவரேஸும் கையெழுத்திட்டனர்.
முதலில் ரெனால்ட், நிஸ்ஸானுடன் இந்தியாவின் மகிந்திரா அண்ட் மகிந்திராவும் இணைந்து செயல்படுவதாக இருந்தது. ஆனால் திடீரென மகிந்திரா விலகிக் கொண்டது.
சென்னையில் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்குப்பதில் புனே அருகே சக்கான் என்ற இடத்தில் ஆரம்பிக்க மகிந்திரா வலியுறுத்தியது. ஆனால் அதை ரெனால்ட்டும், நிஸ்ஸானும் ஏற்கவில்லை. இதையடுத்து மகிந்திரா விலகிக் கொண்டது.
ரெனால்ட்டுடன் இணைந்து மகிந்திரா தற்போது செடான் லோகன் வாகனத்தை தயாரித்து விற்பனை செய்து வருவது நினைவிருக்கலாம்.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள ரெனால்ட் - நிஸ்ஸான் தொழிற்சாலை 2010ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்.