தலித் மாணவர் உதவித் தொகை: மத்திய அரசு-கருணாநிதிக்கு திருமா நன்றி
சென்னை: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனையை திரும்பப் பெற்றதற்கு மத்திய அரசுக்கும் முதல்வர் கருணாநிதிக்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பாக அண்மையில் விதிக்கப்பட்ட நிபந்தனையை இந்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்று பாராட்டுகிறோம்.
சுய நிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகையை பெற முடியும் என்று இந்திய அரசின் சமூக நீதித்துறை திடீரென்று நிபந்தனை விதித்தது.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னையில் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் ஜனவரி 30ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
மேலும் தமிழக முதல்வரிடம் நேரில் முறையிட்டு இந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு இந்திய அரசை வற்புறுத்த கோரினோம். அத்துடன் மார்ச் முதல் வாரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரித்தோம்.
இந் நிலையில் அந்த ஆணையை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் ரயில் மறியலை கைவிடுகிறோம் என்று கூறியுள்ளார் திருமா.