சென்னையில் ரூ.2.5 கோடி கேட்டமைன் பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்டமைன் ஹைட்ரோகுளோரைட் பவுடரை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக முகம்மது நாசர் என்ற பயணி வந்தார். அவரது உடமைகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அதில் தடை செய்யப்பட்ட கேட்டமைன் ஹைட்ரோகுளோரைடு பவுடர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 25 கிலோ கேட்டமைன் அதில் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 2.5 கோடியாகும்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் நாசர் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முறையான ஆவணங்கள் இன்றி கேட்டமனை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது போதை ஏற்றும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் இதை பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
பொதுவாக கேட்டமைன், விலங்குகளுக்கு மயக்கம் ஏற்படுத்துவதற்காக ஊசி மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் போதைப் பொருளாக மாறி விடும் என்பதால் போதைக்காக சிலர் இதை பயன்படுத்துகின்றனர்.
சென்னையில் பெருமளவில் கேட்டமனைப் போதைப் பொருளாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து கேட்டமைன் வேட்டையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக அடிக்கடி கேட்டமைன் கடத்தல்காரர்கள் பிடிபட்டு வருகிறார்கள். கடந்த 2 வாரங்களில் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் 50 கிலோ கேட்டமைன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.