கைதி 'மனைவி' கற்பழி்ப்பு வழக்கு: வக்கீல்கள் நடத்திய நாடகம்!

வேலூர் மத்திய சிறையில் கற்பழிப்பு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருப்பவர் கணேசன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், எனது மனைவி நதியாவை, சிறை துணை ஜெயிலர் மற்றும் சிறைக் காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கடத்திக் கற்பழித்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதையடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி சுப்ரமணியத்துக்கு விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் டிஜிபியும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் அந்த அறிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியை வைத்து விசாரணை நடத்துமாறு உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வேலூர் மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை நடத்தினார். சிறைக்குச் சென்று கணேசனிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். நதியாவையும் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினரின் விசாரணையில், திருப்பூரில் நதியா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு சென்னைக்குக் கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 22ம் தேதி போலீஸார் ஆஜர்படுத்தினர்.
உயர்நீதிமன்றத்தில் நதியாவின் தாயார், தனது மகளுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று கூறியதால் வழக்கில் பெரும் திருப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து நதியாவை அவரது தாயாருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி ஆகியோர் முன்பு நதியாவிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், நதியா பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை. அவர் உடலுறவு கொண்டதற்கான அறிகுறியும் இல்லை. அவர் இன்னும் கன்னி கழியாத நிலையில்தான் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நதியாவை யாருக்கும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நதியா கழுத்தில் தாலி கட்டவில்லை கணேசன். மாறாக ஒரு கயிறைத்தான் கட்டியுள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட கணேசனின் வழக்கறிஞர் சங்கரசுப்பு, இல்லை, இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர் என்றார்.
அதற்கு நீதிபதிகள் நதியாவின் தாயார் திருமணமாகவில்லை என்கிறார். மருத்துவப் பரிசோதனையிலும் நதியா கன்னி கழியாதவர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை என்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் யாஸ்மின், சாந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சிறையில் தன்னைச் சந்தித்த வக்கீலிடம் மஞ்சள் பேப்பரில் சிலவற்றை எழுதி இதை வைத்து மனுவாகத் தயாரிக்கும்படி கணேசன் கூறியுள்ளார். ஆனால் சிறை துணை ஜெயிலர் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து நதியாவைக் கற்பழித்து விட்டதாக புகார் தயாரிக்கப்பட்டுள்ளது.
எப்படி இது நடந்தது. எங்கே கணேசன் கொடுத்த மஞ்சள் பேப்பர் என்று கிடுக்கிப் பிடி போட்டனர். அதற்கு கணேசனின் வக்கீல் சங்கரசுப்பு, அந்த பேப்பர் காணாமல் போய் விட்டதாக தெரிவித்தார்.
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி தினகரன், அது எப்படி காணாமல் போகும். பொய்ப் புகார் தருவதற்காக கணேசனின் கைரேகையை வாங்கியுள்ளனர். யார் இதற்குக் காரணம். என்ன நோக்கத்திற்காக இப்படிப் புகார் கூறினார்கள். போலீஸார் தவறு செய்தால், நீதிமன்றம் விடுமா, அல்லது நீங்கள்தான் விட்டு விடுவீர்களா. இங்கு கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகக் கடுமையானது.
நான்கு பேர் சேர்ந்து கற்பழித்தார்கள் என்பது சாதாரண குற்றச்சாட்டா, அதனால் இந்தப் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும், இருள் மயமாகி விடும் என்று உங்களுக்குத் தெரியாதா. தேவையில்லாமல் நாடகத்தை நடத்தி விட்டீர்கள். சட்டம் தனது கடமையைச் செய்யும். சேற்றி வாரி வீசி விட்டீர்கள். அந்தப் பெண்ணின் நிலைமை என்னாவது.
கணேசனே ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரே பொய் புகார் தந்துள்ளார். அத்தோடு நில்லாமல் ரூ. 10 லட்சம் நஷ்ட ஈட்டையும் கோரியுள்ளார். ஆனால் அந்த நஷ்ட ஈட்டை அவர் மீதுதான் அபராதமாக விதிக்க வேண்டும். இந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு கொடுத்தாக வேண்டும். எவ்வளவு தருகிறீர்கள் என்று சங்கரசுப்புவிடம் கேட்டார்.
அதற்கு அவர் ரூ. 5,000 தருவதாக கூறினார். இதையடுத்து வழக்கை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பின்னர் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது நீதிபதிகள் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர். அதில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளன்று துணை ஜெயிலர் மற்றும் 2 சிறைக் காவலர்கள் சிறைக்குள் பணியில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு சிறைக் காவலர் மின்சாரம் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கற்பழிப்பு வார்டர் ஒருவர் வீட்டில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீட்டைச் சுற்றிலும் வசிப்பவர்கள் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
கணேசனின் மனைவி சரிதாவை விசாரணை அதிகாரி விசாரித்தபோது, பாலியல் ரீதியாக பெண்களை தொந்தரவு செய்வார் கணேசன். தனது ஊனமான சொந்தத் தங்கையையே அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்தப் புகார் பொய்யானது என்ற முடிவுக்கு கோர்ட் வருகிறது. இது சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இதற்கு காரணமானவரகள் யார் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்.
தேவையில்லாத புகாரால் பாதிக்கப்பட்டுள்ள நதியாவுக்கு ரூ. 5000 நஷ்ட ஈடு தருவதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்தப் பணத்தை கணேசனின் வக்கீல்கள்தான் தர வேண்டும். அதை உடனடியாக நதியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த புகாரைத் தொடர்ந்து நான்கு சிறை ஊழியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் அதே பணியிடத்தில் சேர்க்க எந்தத் தடையும் இல்லை. அதேசமயம், கைதி கணேசனை இடமாற்றம் செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம்.
நதியா தனது தாயாருடன் செல்ல எந்தத் தடையும் இல்ைல என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
கணேசனைப் பயன்படுத்தி வக்கீல்கள் சிலர் செய்த சதிச் செயலாக நதியா வழக்கு கருதப்படுகிறது. போலீஸார் மற்றும் சிறை அதிகாரிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கலாம். அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கணேசனை கருவியாகப் பயன்படுத்தி இதுபோல நடந்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இப்படியாக கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நதியா வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications