லண்டன்: இந்திய கைதிக்கு பெருகும் ஆதரவு
லண்டன்: தற்காப்புக்காக தன்னைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி கொன்ற இந்தியருக்கு ஆதரவாக இங்கிலாந்தில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏராளமானோர் பத்திரிக்ைககள் மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் லாங்காஷயர் நகரில் உள்ள ஸ்கெல்மர்ஸ்டேல் என்ற இடத்தில், கடை வைத்திருப்பவர் டோனி சிங் (34). கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது முகமூடி அணிந்த ஒரு நபர் டோனி சிங்கைத் தாக்கி அவரது கடையைக் கொள்ளையடிக்க முயன்றார்.
அவரைத் தடுத்த டோனி சிங்கை, அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கினார். இதையடுத்து தற்காப்புக்காக அந்தத் திருடன் வைத்திருந்த கத்தியைப் பறித்து அவரைக் குத்தினார். இதில் அந்த திருட்டு நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் டோனி சிங்கும் காயமடைந்தார். விரைந்து வந்த போலீஸார் டோனி சிங்கைக் கைது செய்தனர். விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் லியாம் கில்ரோ என்று தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் டோனி சிங் மீது எந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டைப் பதிவு செய்வது என்பது குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சிங்குக்கு ஆதரவாக இங்கிலாந்தில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
சிங் செய்தது கொலை அல்ல. தற்காப்புக்காகத்தான் அவர் திருடனைக் குத்திக் கொன்றார். இது மிகவும் துணிகரமான செயல். இதற்காக சிங்கைப் பாராட்ட வேண்டுமே தவிர தண்டிக்கக் கூடாது என்று பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாளிதழ்கள், இதழ்களுக்கு நூற்றுக்கணக்கானோர் இதுகுறித்து கடிதங்கள் எழுதி வருகின்றனர். அதில், டோனி சிங் ஒரு ஹீரோ. அவர் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு வீர விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டும்.
உயிரிழந்த நபர் அப்பாவி அல்ல. பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட நபர். அவர் இறந்ததில் தவறே இல்லை. அவருக்காக யாரும் அனுதாபப்பட மாட்டார்கள். எனவே இறந்து போன குற்றவாளிக்காக சிங்கைத் தண்டிப்பது நியாயமாகாது என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.