ராமதாசின் மது ஒழிப்பு பிரசார பயணம் தொடக்கம்
தூத்துக்குடி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மது ஒழிப்பு பிரசார பயணத்தை தூத்துக்குடியில் துவக்கினார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இந்த பயணத்தை மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் துவக்கி வைத்தார்.
மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து வரும் ராமதாஸ், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை வேனில் ஊர், ஊராக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மது ஒழிப்பு ஊர்தி பயணம் என்ற பெயரில் இந்த பிரசார பயணம் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் பொதுக் கூட்டத்துடன் தொடங்கியது.
அதில் ராமதாஸ் பேசுகையில்,
1967ம் ஆண்டு நான் டாக்டராக பணியாற்றியபோது மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் ஒரு துளி கூட இல்லாமல் செய்ய முடியும். இதற்கு போலீசுக்கு சம்பளத்தை அதிகரித்தும், விரைவாக பதவி உயர்வும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார்கள்.
டாஸ்மாக் கடைகளை ஒழிப்பது பற்றி அரசு நல்ல முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். மது ஒரு கொடிய விஷம். ஆட்சியாளர்களே இந்த விஷத்தை தமிழக மக்களுக்கு கொடுக்காதீர். முதலில் மக்கள் மதுவை குடிப்பார்கள், பிறகு மது மக்களை குடிக்கும்.
கல்வியை தனியாருக்கு கொடுக்கும் அரசு டாஸ்மாக்கை மட்டும் ஏன் நடத்துகிறது?.
பெண்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, மதுக்கடைகள் எங்கள் பகுதியில் இருக்கக்கூடாது என்று எழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னிடம் சொல்லுங்கள் என்றார் ராமதாஸ்.
குமரி அனந்தன் பேசுகையில்,
காமராஜர் இருந்தவரை காங்கிரசார் மது விலக்குக்காக போராடி சிறை சென்றனர். அதன்பிறகு ராமதாஸ் போராடுகிறார்.
மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்கு கள்ளுக்கடை மறியலை பெரிய ஆயுதமாக பயன்படுத்தினார். நாட்டின் விடுதலைக்கு மதுவிலக்கு முக்கிய ஆயுதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். மதுவிலக்குக்காக எப்போது அழைத்தாலும் நான் ஓடி வருவேன் என்றார்.
பின்னர் குமரி அனந்தன் தொடங்கி வைக்க பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்.
ரயில்வே: தமிழகத்துக்கு பொற்காலம்
தனது பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மதுரை வந்த
ராமதாஸ் பேசுகையில்,
முன்னர் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு இருண்ட காலமாக இருந்தது. ஆனால், இப்போது தமிழகத்துக்கு பொற்காலமாக உள்ளது.
ரயில்வே துறையில் பாமக மத்திய அமைச்சர் வேலு மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அவருக்கு முன் மூர்த்தியும் சிறப்பாக செயல்பட்டார். இவர்களது செயல்பாட்டால் ரயில்வே துறையைப் பொருத்த வரை தமிழக மக்களுக்கு இது பொற்காலமாக உள்ளது.
தற்போது ரயில்வே துறையில் எந்த மாநிலமும் அடையாத முன்னேற்றத்தை தமிழகம் கண்டுள்ளது என்றார்.