போற்றத்தக்க பட்ஜெட்- கருணாநிதி
சென்னை: மத்திய பட்ஜெட்டிக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய நிதியமச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை இந்திய நாட்டு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதைப் பாராட்டி மகிழ்கிறேன்.
சோனியாவுக்கு நான் எழுதிய விரிவான கடிதத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தது உட்பட இந்த இரண்டாண்டு காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் என அமைக்கப்பட்டுள்ள நல வாரியங்கள், அவற்றால் அடையும் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கான பயன்கள் இவற்றை அந்தக் கடிதங்களோடு தொகுத்து அனுப்பியது, மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கென நலன்களையும், உதவிகளையும், சலுகைகளையும் பெருக்கிட ஓரளவு பயன்பட்டிருக்கும் என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.
அகில இந்தியாவிலே உள்ள விவசாயிகளுக்கும் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்களை ரத்து செய்திருப்பது போற்றத்தக்கது, புகழத்தக்கது.
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை வரும் நிதியாண்டில் நிறைவேற்றிடத்தக்க வண்ணம் முதல் தவணையாக 300 கோடி ரூபாய் மைய அரசின் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும்,
ஈரோடு நகரில் விசைத்தறி தொழிலுக்காக மாபெரும் கூட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்து அதற்காக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திப்பதும் வரவேற்புக்குரியது.
அதேபோல, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசியமான துறைகளுக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான இந்த நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.












Click it and Unblock the Notifications