சுஜாதாவுக்கு இன்று நினைவஞ்சலி கூட்டம்
சென்னை: மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு சென்னையில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியான புகழஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது எழுத்தாலும், தமிழ் ஆளுமையாலும், திறமையாலும் அனைத்துப் பிரிவினரையும் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து போய் விட்ட சுஜாதாவுக்கு பல்துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து புகழஞ்சலி என்ற பெயரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
(இன்று) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு, சென்னை நாரத கான சபாவில் இந்த புகழஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது.
நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், பார்த்திபன், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஏ.நடராஜன், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, வசந்த், ராஜீவ் மேனன், கவிஞர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓவியர் மருது, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர்.
தவிர, பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறையினர் உள்பட பல்வேறு பிரிவினரும் இதில் பங்கேற்கின்றனர்.