தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் மீது தாக்குதல்
குழித்துறை: குழித்துறை அருகே நடந்த தேமுதிகவின் பொதுக்கூட்டத்தில் மைக் உடைக்கப்பட்டு பேச்சாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குழித்துறை அருகேயுள்ள பாகோடு ஆலம்பாறை சந்திப்பில் தேமுதிக சார்பில் கட்சியின் கொள்கை விளக்க விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தேமுதிக தலைமை பேச்சாளர் எட்வின்ராஜ் பேசுகையில் கம்யூனிஸ்டுகளை கடுமையாக தாக்கினார். அத்துடன் திருவட்டார் தொகுதி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந் நிலையில் ஒரு கும்பல் திடீரென மேடை மீது ஏறி எட்வின்ராஜ் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடுங்கி அதைக் கொண்டே அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து பொதுக் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தேமுதிக செயலாளர் ஸ்டீபன் குழித்துறை போலீசில் புகார் செய்தார்.
ஆனால், இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.