ராஜபாளையம் அருகே தேவர் சிலை உடைப்பு: பஸ்கள் நிறுத்தம், பரிதவித்த பிளஸ் டூ மாணவர்கள்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே இன்று அதிகாலையில் தேவர் சிலையின் தலையை யாரோ சில விஷமிகள் துண்டித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள சங்கரலிங்காபுரம். இங்குள்ள தவசிக்குளத்தில் 10 அடி உயரமுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது.
இந்த சிலையை சுற்றிலும் பாதுகாப்பாக இரும்பு கேட் போட்டு பூட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று அதிகாலை இந்த சிலையின் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தேவர் சிலை தலை துண்டிக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உடனே அந்த கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு மெயின் ரோட்டில் மரங்களை வெட்டி போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தனர்.
இதனால் அப்பகுதி வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
சாலை மறியல் செய்த கிராம மக்களை போலீசார் சமரசம் செய்தனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்த வேண்டும் என தொடர்ந்து கிராம மக்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு மேலும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை மோசமாவதால் மேலும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பிப்பதால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கு செல்ல பேருந்துகள் இல்லாமல் பரிதவித்து கண்ணீர் விட்டனர்.
அவர்களை போலீசார் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
தேவர் சிலை உடைப்பால் அப்பகுதியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் பரிதவித்தனர்.












Click it and Unblock the Notifications