தர்மபுரி பஸ் எரிப்பு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 மாணவிகள் உயிருடன் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 23 பேர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

தர்மபுரி அருகே, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்த பேருந்தை அதிமுகவினர் மறித்து தீ வைத்து கொளுத்தினர். இச்சம்பவத்தில் 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அதிமுகவினர் 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தண்டனை அடைந்தவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும், மற்ற 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையை 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தவிர கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரும் தங்களை ஜாமீனில் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் பி.பி.நவ்லேகர், லோகேஸ்வர் சிங் பாண்டா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சுப்பிரமணிய பிரசாத் ஆஜரானார். அவர் வாதாடுகையில், குற்றம் புரிந்ததற்கான நேரடி சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாத நிலையில் சூழ்நிலைகளை சாதகமாகக் கொண்டு கீழ் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தண்டனை வழங்கி உள்ளன.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தண்டனை அறிவிக்கப்பட்ட அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து 25 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து இந்த ஜாமீன் மனுக்களும் விசாரிக்கப்படும் என்றும், ஜாமீன் மனுக்கள் குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+