For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.

புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது.

திருச்சி அருகே பேரூரில் இந்தப் புத்தர் கோவில் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனா கலந்து கொண்டார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்குகள் சிலரும் கலந்து கொண்டனர்.

இங்கு புத்தர் கோவிலும், கதிர்காமம் முருகன் கோவிலும் கட்டப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் ஜெயலத் ஜெயவர்த்தனா பேசுகையில், இந்தத் திட்டத்தால் இரு நாட்டு கலாச்சார உறவுகளும் மேலும் வலுவடையும். இந்த திட்டத்தில் அரசியல் எதுவும் இல்லை. முற்றிலும் மதம் தொடர்பான திட்டமே இது.

கதிர்காமத்தில் உள்ள முருகன் கோவிலைப் போலவே இங்கும் உருவாக்கப்படும். கதிர்காமம் போன்ற முருகன் கோவில் இலங்கையைத் தாண்டி கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அனுராதபுரத்திலிருந்து போதி மரத்தின் ஒரு கிளை கொண்டு வரப்பட்டு இங்கு நடப்பட்டுள்ளது என்றார். போதி மரக் கிளையை புத்த பிக்குகள் சேர்ந்து நட்டனர்.

இந்தத் திட்டத்தின் இயக்குநரும், சிங்கள அமைப்பின் தலைவருமான டாக்டர் சீவலி அனுநாயகா தேரோவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போதி மரத்தின் கிளை இந்தியாவிலிருந்துதான் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. இப்போது அதை நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வந்துள்ளோம். நன்றிக் கடனுடன் திருப்பிக் கொடுக்கிறோம்.

தமிழகத்தில் கட்டப்படும் 3 புத்தர் கோவில்களுக்குமான திட்டத்திற்கு நான் தலைவராக செயல்படவுள்ளேன். 3 ஆண்டுகளில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டு விடும் என்றார் தேரோ.

பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம்:

இதற்கிடையே பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இந்தக் கோவில் கட்டும் பணியை எதிர்த்து போராட்டம் நடத்தினர். கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்த வந்த அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X