ஆர்டிஓவிடம் அத்துமீறல்-திமுக நகர செயலாளர் கைது
கரூர்: குளித்தலையில் ஆய்வுப் பணிக்காக சென்ற குளித்தலை ஆர்.டி.ஒவை அவமானப்படுத்தி, அவரது டிரைவரை அடித்து உதைத்த மருதூர் திமுக நகர செயலாளர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை யூனியன் மருதூரில் கூட்டுறவு ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணை மற்றும் முக்கிய பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து ஆர்.டி.ஒவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன் ஆர்.டி.ஒ. ஆனி மேரி மருதூர் கடைக்கு ஆய்வுக்காக சென்றார். அப்போது அங்கு காரில் வந்த திமுக நகர செயலாளர் கண்ணன் ஆர்.டி. ஒ. வாகனத்தை தடுத்தார். ஆய்வு நடத்தக் கூடாது என்று வாக்குவாதம் செய்தார்.
அப்போது ஆர்டிஒவை தகாத வார்த்தைகளால் திட்டிய கண்ணன், அவரது டிரைவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆர்.டி.ஒ. பாதி வழியில் திரும்பினார்.
இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் ஆர்.டி.ஒ. புகார் கொடுத்தார். ஆனால், வழக்கு மட்டும் பதிவு செய்த போலீஸார் கண்ணனை கைது செய்யவில்லை.
இதையடுத்து குளித்தலையில் வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.