வெறுக்கப்படும் பீகாரிகள்-விஷம் காக்கும் தாக்கரே
மும்பை: இந்திய மக்கள் பீகாரிகளை வெறுக்கின்றனர். அவர்கள் எங்கு போனாலும் பிரச்சினை செய்பவர்களாகவே உள்ளனர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் காட்டமான கட்டுரை ஒன்றை தாக்கரே எழுதியுள்ளார்.
பீகாரிகளையும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் இந்தியாவின் எந்தப் பகுதி மக்களுக்கும் பிடிக்கவில்லை. தென்னிந்தியர்களும் அவர்களை வெறுக்கிறார்கள். அஸ்ஸாமிலும் அவர்களைக் கண்டாலே கொதிப்படைகிறார்கள். பஞ்சாப், சண்டிகரிலும் கூட இதே நிலைதான்.
பீகாரிகள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அந்தந்த பகுதி மக்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது மும்பையையும், மராத்தி மக்களையும், மகாராஷ்டிர மக்களையும் குறி வைத்து போரே தொடுத்துள்ளனர்.
லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகளும், அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி பிரபுநாத் சிங் போன்றவர்களும் இருக்க வேண்டிய இடம் சிறைதான்.
மும்பை மக்களின் மூளை அழுகி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை. அவர்களது பேச்சு மும்பையில் வசிக்கும், அவர்களின் ரத்தங்களுக்குத்தான் (வட இந்தியர்களுக்கு) பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணரவில்லை.
கால்நடைகளுக்குப் போடும் தீவணத்தையே சாப்பிட்டவர்கள் பீகார் அரசியல்வாதிகள் (லாலு மீதான கால்நடைத் தீவண ஊழலை குறிப்பிடுகிறார்) என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
பால் தாக்கேரவின் இந்த கட்டுரைக்கு பீகார், உ.பி. மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பால் தாக்கரே மீது லோக்சபாவில் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளனர்.
தாக்கரேவின் கருத்துக்கள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிப்பதாகும். அதை விட நாடாளுமன்றத்தையே அவமதிக்கும் வகையில் எழுதியுள்ளார் தாக்கரே. அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த உரிமை மீறல் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறுகையில், இதுகுறித்து சட்ட நிபுணர்களின் கருத்து கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தேஷ்முக்.