உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் அகதி முகாம்கள்
மதுரை: தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாம்களை உளவுத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் விடுதலை புலிகள் ஊடுருவலாம் என உளவுப் பிரிவு கருதுகிறது.
இதையடுத்து, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் உள்ள முகாம்களை போலீசாருடன் உளவுத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து உளவுத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருப்போர், புதிதாக முகாமுக்கு வந்திருப்போர், அரசு ஒப்புதலுடன் வெளியிடங்களில் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்போர் குறித்து தகவல் அறிக்கை தயார் செய்து வருகிறோம்.
லாட்ஜ்களில் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது தங்குகிறார்களா என்று விசாரித்து வருகிறோம். வாகன தணிக்கையும் தீவிரமாக நடக்கிறது.
விடுதலை புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரையில் கூடல்நகர், திருவாதவூர், உச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகாம்களில் 6,000 பேர் வசிக்கின்றனர். அரசு அனுமதியுடன் வெளியிடங்களில் தங்கியிருக்கும் 160 அகதி குடும்பங்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications