ராக்கெட் லாஞ்சருடன் சிக்கிய வெளிநாட்டு தம்பதி
சென்னை: சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு தம்பதியின் காரில் ராக்கெட் லாஞ்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு வியட்நாமிலிருந்து பயணிகள் கப்பல் வந்தது. அந்தக் கப்பலில் மலேசியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு கார் இருந்தது. அந்தக் காரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் ராக்கெட் லாஞ்சரும், கண்ணிவெடிகயும் இருந்தது தெரிய வந்தது.
இந்தக் கார், அதே கப்பலில் பயணம் செய்த ஐரோப்பாவைச் சேர்ந்த நிலான் தம்பதிக்குச் சொந்தமானது. இதையடுத்து அந்த தம்பதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது கம்போடியாவில் தாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது அங்குள்ள ஒரு விற்பனை நிலையத்தில் அழகுப் பொருளாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த ராக்கெட் லாஞ்சரை வாங்கியதாக தெரிவித்தனர். கண்ணி வெடியையும் அங்குதான் அவர்கள் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம், கண்ணி வெடியையும், ராக்கெட் லாஞ்சரையும் இப்படி கொண்டு வருவது சட்ட விரோதம் என்று கூறிய சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.