எங்களை சீண்டினால் தமிழகம் தாங்காது-கார்த்திக் எச்சரிக்கை
ராஜபாளையம்: எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். சீண்டினால் தமிழகம் தாங்காது என்று பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர், நடிகர் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே சங்கரலிங்காபுரம் பகுதியில், கடந்த 3ம் தேதி, நடிகர் சிவாஜி கணேசன் திறந்து வைத்த தேவர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது. இது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து உடனடியாக விஷமிகளைக் கைது செய்யக் கோரி ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கார்த்திக், பொதுச் செயலாளர் சேதுராம பாண்டியன், அமைப்புச் செயலாளர் பொன்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம மக்களும் பெரும் திரளாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கார்த்திக் பேசுகையில், அமைதியான முறையில் மக்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த நான்கு மாத காலமாகவே தேவர் சிலைகளை சிலர் சேதப்படுத்தி வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது.
எங்களை சீண்ட வேண்டாம். அப்படி சீண்டினால் தமிழகம் தாங்காது. யாராக இருந்தாலும் இனிமேல் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபட வேண்டாம்.
சிலையை உடைத்தவர்களை எங்களிடம் அடையாளம் காட்டுங்கள். அவர்களிடம் நாங்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தண்டிக்க மாட்டோம். மக்கள் முன்பு மன்னிப்பு கேட்கச் சொல்லுவோம்.
11ம் தேதி மறுபடியும் இங்கு வருவேன். அதற்குள் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மக்கள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருப்பார்கள் என்றார் கார்த்திக்.