ராஜ்யசபாவில் இட ஒதுக்கீடு-திருமாவளவன் கோரிக்கை
சென்னை: ராஜ்யசபா எம்பிக்கள் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலங்களவைத் தேர்தலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீட்டு நடைமுறையில் இருந்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
எனவே மாநிலங்களவைத் தேர்தலில் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரும் 15ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாநிலங்களவைத்யில் 150 இடங்கள் இருந்தன. அதில் 6 இடங்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும் மேலும் 6 இடங்கள் பெண்களுக்கும் 49 இடங்கள் முஸ்லிம்களுக்கும் 4 இடங்கள் சீக்கியர்களுக்கும் 75 இடங்கள் பொது இடங்களாகவும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
ஆனால், இன்று 245 இடங்கள் உள்ள நிலையில் 22.5 சதவிகித தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கண்டு கொள்ளவே இல்லை.
மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு கொண்டு வர அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 18 ராஜ்யசபா இடங்கள் உள்ளன. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 இடங்கள், தலித்துகளுக்கு வழங்க வேண்டும். தற்போது 2 இடங்களில் மட்டுமே தலித்துக்கள் எம்.பிக்களாக உள்ளனர்.
முஸ்லிம், கிறிஸ்துவ இனத்தில் யாரும் இல்லை.
பிரதமர், உள்துறை, ராணுவம் போன்ற முக்கிய பொறுப்புகளில் மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே வர வேண்டும். மாநிலங்களை விட்டு மாநிலம் ராஜ்யசபா தேர்தலில் நிற்கும் முறையை தவிர்க்க வேண்டும்.
ஈழத்தில் தமிழ் எம்.பி. சிவனேசன் படுகொலை செய்யப்பட்டதற்கு சிங்கள ராணுவமே காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications