திரிபுராவில் இடதுசாரிகள் மாபெரும் வெற்றி: மேகாலயாவில் காங். முன்னிலை-குழப்பம்
அகர்தலா&ஷில்லாங்: திரிபுராவில் மொத்தமுள்ள 60 இடங்களில் 49 இடங்களி்ல் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி.
60 உறுப்பினர் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு கடந்த மாதம் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் 91 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் இடதுசாரி முன்னணி 49 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக கூட்டணிக்கு போட்டியிட்ட எல்லா இடங்களிலும் படுதோல்வி ஏற்பட்டது.
மாணிக் சர்க்கார் மீண்டும் முதல்வர்:
இடதுசாரிகள் மீண்டும் வென்றுள்ளதையடுத்து மாணிக் சர்க்கார் மீண்டும் முதல்வராகிறார்.
மேகாலயாவில் இழுபறி:
மேகாலயா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு கடந்த 3ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 89.05 சதவீத வாக்குகள் பதிவாயின. இங்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதுவரை முடிவுகள் தெரிந்த தொகுதிகளில் காங்கிரஸ் 20 இடங்களில் வென்றுள்ளது.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வென்றுள்ளது. இம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் சங்மா தேசியவாத கட்சியின் முக்கியத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய ஜனநாயகக் கட்சி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரசுக்கு சங்மா ஆதரவு தர மாட்டார் என்பதால் அடுத்த ஆட்சி அமைவதில் சுயேச்சைகளின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.
பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்துள்ளது.
மேகாலயா அரசியல் வரலாற்றில் அங்கு எப்போதுமே எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பலத்தை பெற்றதில்லை. இதனால் எப்போதும் கூட்டணி அரசுகள் தான் அமையும், கவிழும்.
கடந்த 35 ஆண்டுகளில் 18 முறை அரசுகள் அமைக்கப்பட்டு அதில் பெரும்பாலானவை பாதியிலேயே கவிழ்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதும் அதே ஸ்திரமற்ற நிலை தான் ஏற்படும் எனத் தெரிகிறது.