கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. சிவநேசனுக்கு பிரபாகரன் இறுதி அஞ்சலி
வன்னி: சர்க்கரை வியாதியாலும், இலங்கை விமானப்படைத் தாக்குதலாலும் பிரபாகரன் படுகாயமடைந்துள்ளார், அவரது கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தரப்பில் தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முழு ஆரோக்கியத்துடன், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் எம்.பி சிவநேசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான சிவநேசன் சமீபத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் பலியானார். இலங்கை ராணுவம்தான் இவரைக் கொன்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கண்ணிவெடியை வைத்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில், சிவநேசனின் இறுதிச் சடங்குகள் வன்னியில் நடந்தன. இதில் பிரபாகரன் கலந்து கொண்டு சிவநேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது உடலுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவநாதன் கிஷோர், அரியநேந்திரன், ரசீத் முகம்மது இமாம், செல்வம், அடைக்கலநாதன், கஜேந்திரன், மாவை சேனாதிராசா, எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.