போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சினிமா லைட்மேன்கள்
சென்னை: காவல் நிலையத்தை சினிமா லைட்மேன்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த போஸ்ராஜ் (45), சினிமா மற்றும் டி.வி. வெளிப்புறப் படப்பிடிப்பு லைட்மேன்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்.
இவர், சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
எங்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் நான் போட்டியிட உள்ளேன். அது பிடிக்காத சிலர், என்னை மிரட்டுகிறார்கள். சிலர் என்னைத் தாக்க முற்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
போலீசார் இந்த மனு மீது விசாரணை நடத்தி நசீர் அகமது என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏராளமான லைட்மேன்கள் சங்கத்தினர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நசீர் அகமதுவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கலை மேலும் வளர்க்க விரும்பாத போலீசார் நசீர் அகமதுவை விடுவித்துவிட்டனர்.
இந்த விவகாரத்தி்ல் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications