கம்யூ. அலுவலகம் மீது ஆர்எஸ்எஸ் தாக்குதல்-கருணாநிதி கண்டனம்
சென்னை: டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதை முதல்வர் கருணாநிதி கடுமையாக கண்டித்துள்ளார்.
நேற்று டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சங் பரிவார் போன்ற மதவாத சக்திகளின் இயக்கங்களை சேர்ந்த வெறியர்கள், டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து அமளி நடத்தினார்கள் என்றும்,
அங்கிருந்த கம்யூனிஸ்ட் தொண்டர்களையும், தலைவர்களையும் தாக்கினார்கள் என்றும் வந்துள்ள செய்தி ஜனநாயகவாதிகளையும், அரசியலில் நாகரீகத்தை விரும்புவோரையும் அதிர்ச்சியடையச் செய்யக் கூடியது.
இத்தகைய வன்முறையாளர்களின் வேட்டைக் காடாக நாடு ஆகாமல் இருக்க, பொதுமக்களின் சக்தி ஒருமுனைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் டெல்லி அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கைது:
இதற்கிடையே திருச்சியில் பாஜக தலைவர் அத்வானியின் கொடும்பாவியை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் தொண்டர்கள் 16 பேர் உள்பட 120 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு:
இந் நிலையில் இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெடித்தது. பாஜக, இடதுசாரி உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் வெடித்ததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்த விவாதத்தின்போது சிவசேனா தவிர்த்த பிற கூட்டணிக் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாக வாதிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.