சந்தேகத்துக்குரிய கேரள வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
பாவூர்சத்திரம்:சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த கேரள வாலிபர்களை கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது பெத்தநாடர்பட்டி கிராமம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து 2 பேர் இங்கு வந்தனர். அவர்களுடன் ஒரு சிறுவனும் வந்திருந்தான்.
அவர்கள் கையில் எலுமிச்சைபழம் மற்றும் பூஜைக்குரிய பொருட்களை வைத்திருந்தனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த விவசாயி, அவர்களிடம் விசாரித்தார். முன்னுக்கு பின் முரணான அவர்கள் பதிலளித்தனர்.
அந்த சிறுவனை கேரளாவில் இருந்து அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. சிறுவன் அவர்களை பார்த்து அழுதுகொண்டே இருந்ததால், விவசாயிக்கு சந்தேகம் வலுத்தது. அப்பகுதி மக்களிடம் விவரத்தை கூறினார்.
கிராம மக்கள் திரண்டு வருவதை பார்த்த கேரள வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். கிராம மக்கள் விரட்டிச் சென்று அவர்களை பிடித்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த நெடுஞ்சாலைத் துறை போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications