காங். மீண்டும் ஆட்சிக்கு வரும்-சோனியா: மன்மோகன் சி்ங்குக்கு பாராட்டு
நாடாளுமன்றத் தேர்தல் சீக்கிரமே வரலாம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சமீபத்தில் லாலு பிரசாத்தும், ப.சிதம்பரமும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் இதை உறுதி செய்வதாக உள்ளன.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ளார். நேற்று வட மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் நடந்தது. இன்று தென் மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் நடந்தது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் தென் மாநில காங்கிரஸ் தலைவர்கள், அந்தந்த மாநில பொறுப்பாளர்கள், தென் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் ராஜ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.
சோனியா பேசுகையில், மண்ணின் மைந்தர் என்ற பிரச்சினையை எழுப்புவது நாட்டைப் பிளவுபடுத்தும் செயலாகும். இதுபோன்ற செயல்களை நாடு ஒரு போதும் அனுமதிக்காது. காங்கிரஸ் கட்சியும் இதைப் பொறுத்துக் கொள்ளாது.
மாநில காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற பிரிவினைவாதப் போக்கையும், பேச்சையும், செயல்களையும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சி்ங் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். இதனால் காங்கிரஸ் தான் மீன்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் சோனியா காந்தி.
வட இந்தியர்களுக்கு எதிரான ராஜ் தாக்கரேவின் செயல்களுக்கு இதுவரை காங்கிரஸ் கட்சி கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக சோனியா காந்தி அந்தப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.