ஆஸ்எஸ்எஸ் தாக்குதல் பயங்கரவாத செயல்-கனிமொழி
சென்னை&டெல்லி: டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன் அமைதியாக போராட்டம் நடத்தச் சென்ற பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் கல் வீசித் தாக்கினார்கள் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியை விட்டு பலர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருகிறார்கள்.
அங்கு கம்யூனிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களில் கணிசமானவர்கள் இப்படி மனம் மாறி வந்தவர்களே. இது கம்யூனிஸ்டு கட்சியின் சகிப்புத்தன்மையற்ற நிலையின் வெளிப்பாடு.
சமீபத்தில் கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய கொலை வெறித் தாண்டவத்திற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம் முன்பு அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் (பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள்) மீது முதல் தளத்திலிருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இனியாவது கம்யூனிஸ்டுகள் வன்முறைப் பாதையை விட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும்.
கேரளத்தில் அவர்கள் நடத்தும் வன்முறை கொலை வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கணேசன்.
ராஜ்யசபாவில் கனிமொழி கண்டனம்:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்பி கனிமொழி,
நாட்டின் தலைநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தை முன் கூட்டியே திட்டமிட்டு தாக்கியுள்ளார்கள். காரில் கற்களை கொண்டு வந்து தாக்கியிருப்பதிலேயே இதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டமிட்ட தாக்குதலை கடுமையான கண்டிக்கிறோம். இது முதல்முறையாக நடந்ததல்ல.
பெருந் தலைவர் காமராஜ், டெல்லியில் இருந்தபோது இவ்வாறு நடந்துள்ளது. ஜனநாயகத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடம் இல்லை.
எங்கள் தலைவர், முதல்வர் கருணாநிதி இந்த வெறியாட்டத்தை ஏற்கனவே கண்டித்துள்ளார். இது போன்ற சம்பவங்களின்போது மாநில அரசு பொறுமை காட்ட வேண்டாம் என்று அவர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பயங்கரவாத செயலாக கருத வேண்டும் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications