பார்வையற்ற மாணவி அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர்
சென்னை: அமெரிக்காவில் நடைபெறும் இளம் தலைவர்கள் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி பங்கேற்கும் வகையில், அவரது பயணம், தங்குமிடம் உள்ளிட்ட எல்லா செலவுகளையும் அரசே ஏற்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சென்னையில் உள்ள சிறுமலர் பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பினோரா செபின்.
இவர் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கவுள்ள இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், அமெரிக்க மாநாட்டில் கலந்து கொள்ள தனக்கு வசதி இல்லாததால் நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவை பரிசீலித்த முதல்வர், அந்த மாணவி அமெரிக்காவுக்கு சென்று வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து அந்த மாணவிக்கு ரூ.4.7 லட்சம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
துரைமுருகனுடன் ஆலோசனை:
இந் நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், காலில் அடிபட்டு கடந்த ஒரு வாரமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனைக்கு சென்று அவரிடம் கருணாநிதி நலம் விசாரித்தார். இந் நிலையில், நேற்று துரைமுருகன் வீடு திரும்பினார்.
அவரை வீட்டில் போய் சந்தி்த்த கருணாநிதி, ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக பா.ம.கவின் மார்ச் 15 கெடு குறித்து விவாதித்தாகத் தெரிகிறது.