ராஜ்யசபா சிபிஎம் சார்பில் டி.கே.ரங்கராஜன் போட்டி
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வருகிற 26ம் தேதி 6 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
திமுக தனது வேட்பாளர்களாக ஏ.ஏ.ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டாலின் ஆகியோரை அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெறும் தொழிற்சங்கத் தலைவரான டி.கே.ரங்கராஜன், கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். 67 வயதாகும் ரங்கராஜன் 1960ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 1964ம் ஆண்டு கட்சி உடைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ள ரங்கராஜன், கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
காங். வேட்பாளர்கள் யார்?:
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி வழக்கம் போல இன்னும் தனது வேட்பாளர்களை இறுதி செய்யாமல் உள்ளது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மீண்டும் போட்டியிடுவது உறுதி. இன்னொரு வேட்பாளர் இடத்தைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சீட் வாங்க கடுமையாக முயன்று வருகிறார். ஜெயந்தி நடராஜனும் போட்டியின் முன்னணியில் உள்ளார்.
முன்பு வீரப்ப மொய்லியும் போட்டியில் இருந்தார். ஆனால் அவருக்கு தமிழகத்தில் பிற கட்சிகளிடமிருந்து வந்த எதிர்ப்புகளை விட காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதாம். இதனால் மொய்லி போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படும் கிருஷ்ணசாமிக்கும், ஜெயந்திக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் சமீப காலமாகவே எம்.பியாகத் துடித்திக் கொண்டிருக்கிறார்கள். கை வரைக்கும் வந்த பல வாய்ப்புகளை இருவரும் சில முறை நழுவ விட்டவர்கள்.
இந்த நிலையில் யாருக்கு சீட் கிடைக்கப் போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.