விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக்-பணிகள் பாதிப்பில்லை
சென்னை: நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் விமான நிலைய பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. டெல்லி விமான நிலையத்தில் எஸ்மா சட்டம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பேகம்பேட்டில் உள்ள விமான நிலையத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பெங்களூரில் தற்போது உள்ள பழைய விமான நிலையத்தை மூடி விட்டு புதிய விமான நிலையத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நகரங்களிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த நகரங்களில் உள்ள பழைய விமான நிலையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தால் விமான நிலையப் பணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கையாக விமானப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் விமானங்களை விமானப் படை விமானிகளை வைத்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ..
டெல்லி விமான நிலையத்தில், எஸ்மா சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான் போக்குவரத்து வழக்கம் போல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தை ஜிஎம்ஆர் நிறுவனம் தனது பராமரிப்பில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ..
தமிழகத்தில் விமானப் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. விமான நிலையப் பணிகள் வழக்கம் போல நடந்து வருவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் வரை விமானங்கள் வழக்கம் போல வந்து செல்கின்றன.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான முனையங்களில் எந்தப் பணியும் பாதிக்கப்படவில்லை.
பாதுகாப்புக்காக போலீஸாரும், விமானப்படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினரும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை.
திருச்சி விமான நிலையத்தில் 92 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இங்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களும் வழக்கம் போல வந்து செல்வதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.