மாணவியின் முடியை வெட்டி தண்டனை-ஆசிரியை கைது
கோவை: இரட்டை ஜடை போடாமல் வந்த 5ம் வகுப்பு மாணவியின் தலை முடியை வெட்டியும், அவரை கன்னத்தில் அறைந்தும், முட்டி போட வைத்தும் கடுமையான தண்டனை கொடுத்ததாக கோவை ஆசிரியை கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியையின் காரை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, தடாகம் சாலையில் உள்ள பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஹர சுதா. இவரது பள்ளியில் மாணவிகள் ஒற்றை ஜடை போடக் கூடாது, இரட்டை ஜடை போட்டுக் கொண்டுதான் வர வேண்டும் என கட்டுப்பாடு உள்ளதாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரிஹர சுதா, இரட்டை ஜடை போடாமல் பள்ளிக்குப் போயுள்ளார். இதையடுத்து அவரது ஆசிரியை ஷோபனா, கோபமடைந்து, மாணவியை அடித்துள்ளார். இதில் மாணவி சுதா, நிலை தடுமாறி சுவரில் போய் மோதி விழுந்துள்ளார்.
ஆசிரியையின் கோபத்தைப் பார்த்துப் பயந்து போன சுதா, தான் இருதய நோயாளி என்று கூறி அழுதுள்ளார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத சுதா மாணவியின் தலைமுடியை வெட்டியுள்ளார். மேலும் முட்டி போட வைத்துள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய சுதாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை கொடுத்தனர் பெற்றோர்.
ஆசிரியை ஷோபனாவின் இந்த கடுமையான தண்டனை குறித்து மாணவியின் தாயார் சுமதி, பள்ளி நிர்வாகம், மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல் ஆகியோரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. இதில் ஆசிரியை ஷோபனா, பள்ளி நிர்வாகம், சுதாவின் தாயார், சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசாரணை முடிந்து ஆசிரியை ஷோபனா வெளியே வந்தபோது அவரை முற்றுகையிட மாணவியின் உறவினர்கள் முயன்றனர். இதையடுத்து ஆசிரியையுடன் வந்தவர்களுக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சுதாவின் சித்தி தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த சுதாவின் உறவினர்கள், ஆசிரியை ஏறிய காரை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். காரையும் அடித்து தாக்கினர். இதனால் அந்த இடத்தில் பெரும் அமளியாக இருந்தது.
போலீஸார் தலையிட்டு ஆசிரியையின் காரை பத்திரமாக வெளியேற உதவினர். மாணவியின் உறவினர்களையும் சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஷோபனா கைது - இன்னொரு ஆசிரியை சஸ்பெண்ட்
இந்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை ஷோபனாவை நேற்று மாலையில் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர். பிறகு நீதிபதியின் உத்தரவின் பேரில் ஆசிரியை விடுவிக்கப்பட்டார்.
மேலும், ஆசிரியை ஷோபனாவின் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக இன்னொரு ஆசிரியை ஜெயந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.