மிஸிஸிபியில் ஓபாமா வெற்றி-ஹில்லாரிக்கு மீண்டும் சறுக்கல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்வு செய்யப்பட்டு விட்டார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் இழுபறி நிலவுகிறது.
நியூயார்க் செனட்டரான ஹில்லாரி கிளிண்டனுக்கும், இல்லினாய்ஸ் செனட்டரான பாரக் ஓபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆரம்பத்தில் ஹில்லாரிக்கு அதிக வாக்குகள் இருந்தன. ஆனால் இப்போது ஹில்லாரியை ஓபாமா முந்தி விட்டார்.
தொடர்ந்து 12 மாகாணங்களில் வெற்றி பெற்று ஹில்லாரிக்கு பெரும் கிலியை ஏற்படுத்தினார். ஆனால் ஓஹையோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று போட்டியிலிருந்து நீக்கப்படும் அபாயத்தைத் தவிர்த்தார் ஹில்லாரி. ஆனால் மறுபடியும் ஓபாமாவின் வெற்றி வேட்டை தொடர ஆரம்பித்துள்ளது.
நேற்று மிஸிஸிபி மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஓபாமா வெற்றி பெற்றார்.
இந்த வெற்றிக்கு முன்பாக ஓபாமாவின் வாக்கு எண்ணிக்கை 1473 ஆக இருந்தது. தற்போது அது 1579 ஆக உயர்ந்துள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட 2025 பிரதிநிதிகள் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போதுள்ள நிலையில் இரு வேட்பாளர்களுக்குமே அந்த பலம் இல்லை. பெறவும் வழியில்லை. அடுத்து ஏப்ரல் 22ம் தேதி பென்சில்வேனியாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 158 பிரதிநிதிகள் இருப்பதால் இந்த மாநிலத்தில் வெற்றி பெறுவது இருவருக்குமே முக்கியமானதாகும்.
முதன்மை வாக்கெடுப்புகளில் யாருக்கும் தேவையான வாக்குகள் கிடைக்காவிட்டால் டென்வரில் நடைபெறும் சூப்பர் பிரதிநிதிகள் வாக்கெடுப்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications