காவிரி தீர்ப்பை அமல்படுத்த முடியாது: கர்நாடகம்
டெல்லி: காவிரி நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கடந்த 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை அறிவித்தது. ஆனால் ஒருபோதும் அதை கர்நாடகம் அமல்படுத்தியதில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதித் தீர்ப்பு வெளியானது.
ஆனால் இந்தத் தீர்ப்பு எந்த மாநிலத்திற்கும் திருப்தி தரவில்லை. இதனால் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தன. இது நிலுவையில் இருக்கிறது.
சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்ட கர்நாடகம் முயலுகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளோம். இந்நிலையில் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது. மேலும் இறுதி தீர்ப்பையே ஏற்றுக்கொள்ளாத போது, இடைக்கால உத்தரவை அமல்படுத்த தேவையில்லை.
கர்நாடக அரசு மாநில மக்களின் நலன்களை மனதில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே தடுப்பு அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு சொல்வதில் நியாயம் இல்லை.
பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தை மீண்டும் கூட்டி, நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு பற்றி பரிசீலிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை நிறைவேற்ற கர்நாடகம் தயாராக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications