ஊழியர்கள் ஸ்டிரைக் - விமான நிலையங்களில் குப்பைக் குவியல்!
சென்னை: நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் குப்பைகள் தேங்கி விமான நிலையங்கள் நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளன.
ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களை மூடக் கூடாது, விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த ேவலைநிறுத்தத்தால் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதும் விமான நிலைய துப்புறவுப் பணிகள் அறவே பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் தேங்கி வரும் குப்பையால் விமான நிலையங்கள் நாற்றமடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் குளிர்பான பாட்டில்கள், பேப்பர்கள் போன்றவை சிதறிக் கிடக்கின்றன. அவற்றை யாரும் சுத்தப்படுத்தாததால் தேங்கிக் கிடக்கின்றன.
ஹவுஸ் கீப்பிங், தீயணைப்பு, சிவில், எலக்ட்ரிகல், சரக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் இந்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இப்படியே நீடித்தால் விமான நிலையங்கள் இயங்கும், ஆனால் யாரும் உள்ளே போக முடியாத அளவுக்கு நாற்றம் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என பயணிகள் கூறுகின்றனர்.
தனியார் வசம் உள்ள டெல்லி விமான நிலையத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அரசு வசம் உள்ள விமான நிலையங்களில் குப்பைக் குவியல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளன.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications