வசந்தி ஸ்டான்லி மாற்றம்?
சென்னை: ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தி ஸ்டான்லி மீது வங்கி மோசடிப் புகார் எழுந்திருப்பதால் அவரை மாற்ற திமுக மேலிடம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் ஏ.ஏ. ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் வேட்பு மனு தாக்கலும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வசந்தி ஸ்டான்லி மீது மோசடிப் புகார் எழுந்துள்ளது. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியதில் அவர் பண மோசடி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
மேலும் திமுகவைச் சேர்ந்த பலரும் கூட வசந்தி குறித்த புகார் பட்டியலை அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தியை மாற்றி விட திமுக தலைமை தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இன்று காலை திடீரென மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்ற முதல்வர் கருணாநிதி, இதுகுறித்து அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. வசந்திக்குப் பதில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் திமுக தரப்பில் சலசலப்பு நிலவுகிறது.