சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: தடை கோரி வழக்கு
மதுரை: பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிருஸ்தவர் மற்றும் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலன் தனசீலன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவி்ல்,
நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிருஸ்தவன். இதுவரை பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலேயே கிருஸ்தவர்களும், முஸ்லீம்களும் சலுகை பெற்று வந்தனர்.
தற்போது தமிழக அரசு ஓர் அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன்படி, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு விகிதாசாரத்துக்குள்ளேயே முஸ்லீம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் 7 சதவீத உள் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
உண்மையிலேயே, சிறுபான்மையினரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் விதமாகவே அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
குறிப்பாக, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகள் பெருமளவு பாதிக்கப்படும். கடந்த ஆண்டில் நடந்த செகண்டரி கிரேடு ஆசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு எனது பெயரை வேலைவாய்ப்புத்துறையினர் பரிந்துரைத்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே பணி நியமனத்துக்கு என்னை பரிந்துரைக்கவில்லை.
இதுபற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியை அணுகி கேட்டதற்கு, எனது பெயர் தனிப்பட்டியலில் இருப்பதாகவும், அதில் எனது சீனியாரிட்டி 200 பேருக்குப் பின்னால் இருப்பதால் என்னைப் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்தார்.
எனது வாய்ப்பு பறிபோனதற்குக் காரணம் தமிழக அரசு பிறப்பித்துள்ள உள் ஒதுக்கீடு அவசர சட்டம். ஓர் ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு செய்தால் இதுபோன்ற பாதகங்கள்தான் ஏற்படும். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே அரசின் உத்தரவை சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் இதேபோன்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாவதின் அடிப்படையில் இந்த மனுவை ஏற்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து இந்த மனு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications