ராஜ்யசபா தேர்தல் - ஜெயந்தி நடராஜன் போட்டி
தமிழக ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு இடங்களில் போட்டியிடுகிறது. இதில் ஒரு இடத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் போட்டியிடுகிறார். அவரது பெயரை காங்கிரஸ் மேலிடம் நேற்று பிற்பகலில் முறைப்படி அறிவித்தது. ஆனால் 2வது வேட்பாளர் பெயரை காங்கிரஸ் வெளியிடவில்லை.
2வது வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2வது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் போட்டியிடுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திக்கு சீட் கிடைத்துள்ளதன் மூலம் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைத்துக் கோஷ்டியினரும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணசாமி கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு சீட் நிராகரிக்கப்பட்டு ஜெயந்திக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் ஆகியோர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜனும் நாளையே வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளார். நாளைதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.