என்ஜினில் கோளாறு: பாதி வழியில் நின்ற குமரி-சென்னை ரயில்
இந்த ரயி்ல் நேற்றிரவு குமரியிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர்- கண்டம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து மாற்று என்ஜின் வந்து சேர்ந்தது.
இதையடுத்து அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது. காலை 6.45 மணிக்கு எழும்பூர் வந்திருக்க வேண்டிய அந்த ரயில் 9.15 மணிக்குத் தான் வந்து சேர்ந்தது.
இந்த ரயில் நடுவழியில் நின்றதால் அந்த வழியே வந்து கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
காலை 7 மணிக்கு வந்து சேர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் 9.30 மணிக்கும், 7.40 மணிக்கு வர வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் 10.10 மணிக்கும்,
8.40க்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11.10 மணிக்கும் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
ரயில் சேவை ரத்து:
ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சப்-வே அமைக்கும் பணி நடப்பதையடுத்து மயிலாடுதுறை, காரைக்குடி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி, அய்யன்குடி இடையே உள்ள இரு ஆளில்லா ரயில்வே கேட்களை தென்னக ரயில்வே அகற்றுகிறது. இந்த இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.
இதையடுத்து மயிலாடுதுறை-காரைக்குடி பாஸஞ்சர் இடையிலான இரு ரயில்கள் இன்று பேராவூரணி வரை மட்டுமே இயக்கப்பட்டன.
இந்தப் பணி காரணமாக வரும் 18ம் தேதியும் இந்த ரயில்கள் பேராவூரணி வரை மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.