சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர்
சென்னை: ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலும், அவரது 2வது மனைவி கிருத்திகாவும், பரஸ்பரம் சுமூகமாக பிரிந்தனர். ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் தலையிட மாட்டோம் எனவும் போலீஸில் உறுதியளித்துள்ளனர்.
சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா. இவருக்கும், ராஜகோபாலுக்கும் சமீப காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபாலும், கிருத்திகாவும் தனித் தனியாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பரஸ்பரம் புகார் கொடுத்தனர்.
ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது. அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக புகார் கூறினார் கிருத்திகா. ராஜேந்திரன் என்ற வக்கீலின் கட்டுப்பாட்டில் தனது மனைவி இருப்பதாகவும், அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மீது பொய்யான புகாரை கொடுப்பதாகவும் ராஜகோபால் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்குமாறு துணை ஆணையர் லட்சுமிக்கு, ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். அதன்படி இருவரையும் அழைத்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தினார்.
அப்போது கிருத்திகா, ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் ராஜகோபால் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இருவரையும் அழைத்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தினார்.
முதலில் இருவரையும் சேர்த்து அமர வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரின் வக்கீல்களையும் உடன் வைத்துக் கொண்டு விசாரிக்கப்பட்டது.
அப்போது கிருத்திகா, என்னால் சேர்ந்து வாழவே முடியாது. இருவரும் அவரவர் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். எனக்கு அவராலோ அல்லது அவரது ஆட்களாலோ எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. இதற்கு அவர் உத்தரவாதம் தர வேண்டும்.
அவருடன் நான் 15 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளேன். எனவே எனது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான உதவியையும் அவர் செய்ய வேண்டும் என்றார் கிருத்திகா.
கிருத்திகா தனியாக பிரிந்து செல்ல நான் சம்மதிக்கிறேன். அவருக்கு நான் எந்தவகையிலும் தொல்லை கொடுக்க மாட்டேன். அவர் கேட்டுள்ள உதவிகள் உள்ளிட்டவை குறித்து வக்கீல்களுடன் சேர்ந்து பேசி முடிவு சொல்கிறேன் என்றார். அதன் பின்னர் இருவரும் கிளம்பிச் சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து துணை ஆணையர் லட்சுமி கூறுகையில், இருவரும் பிரிந்து விட தீர்மானித்துள்ளனர். கிருத்திகா சில உதவிகளைக் கேட்டுள்ளார். அதுகுறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது. சட்டரீதியாக அவர்களேதான் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் லட்சுமி.












Click it and Unblock the Notifications