For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொடா வழக்குகள்: கருணாநிதிக்கு நெடுமாறன் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பொடா சட்டத்தை முன் தேதியிட்டு திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும். இது தொடர்பாக மத்திய அரசுக் கூட்டணி உறுதியளித்துவிட்டு, தேர்தலில் வென்ற பிறகு நேர் மாறாக நடந்து கொண்டதாக பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா ஆட்சியில் பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுப்பட்டதாக கூறும் முதல்வர் கருணாநிதி, தான் பதவியேற்ற பிறகும் அதை ஏன் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளருமான பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என நான் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காமல் வழக்கம்போல வார்த்தை விளையாட்டு நடத்தி உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்திருக்கிறார்.

பொடா சட்டத்தில் யார்-யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாக கூறி இறுதியாக முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் என குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் 42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதம் 21 பேர் தானா என்று எனது கட்டுரையை படித்தவர்களே பார்த்து சிரிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரிடையாகக் திரும்பப் பெற்று விட முடியாது. சிறப்பு நீதிமன்றம்தான் அதன் மீது தீர்ப்புக் கூற முடியும். அரசைப் பொறுத்தவரையில் வழக்குகளை திரும்ப பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என முதல்வர் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பரந்தாமன், பாவாணன் ஆகியேர் மீதுள்ள பொடா வழக்குகளை விசாரித்த மறு ஆய்வு மன்றம் அவர்களை விடுதலை செய்யுமாறு ஆணையிட்டு விட்டது.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்களான பிறகும் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்குகளைத் திரும்ப பெறுவதற்கான மனு இன்று வரை கொடுக்கப்படவில்லை.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி அரசு வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதறாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது.
திமுக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால் இதை செய்ய திமுக அரசு முன் வரவில்லை.

முன் தேதியிட்டு பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திலும் இது குறித்து தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இதற்கு நேர் மாறாக மன்மோகன்சிங் அரசு நடந்து கொண்டது. பொடா சட்டத்தை முன் தேதியிட்டு திரும்ப பெறவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுப்பட்டதாக கூறுகிற முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் எனது கேள்வியாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X