சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழக பட்ஜெட் உரையை அதிமுக இன்று புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
2008-09ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கலானது. இன்று காலை அவை கூடியதும் நிதியமைச்சர் அன்பழகனை பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு அழைத்தார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
அப்போது எழுந்த அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கையில் வைத்திருந்த ஒரு பேப்பரைப் படித்தார். ஆனால், அதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்தார்.
அப்போது எழுந்த அதிமுக எம்ஏல்ஏக்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், பெரும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வமும், அதிமுக கொறடா செங்கோட்டையனும்,
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் பரவிவிட்டது. விடுதலைப் புலிகள் ஊடுருவலும், கொலைகளும் கொள்ளைகளும் தினசரி சம்பவங்களாகிவிட்டன.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவில் நாட்டிலேயே முதல் மாநிலமாகிவிட்டது தமிழகம்.
அதிமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படவில்லை. ஆனால் இப்போது மாநிலமே இருண்டு கிடக்கிறது. இதனால் தொழிற்சாலைகள், மாணவர்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications