கர்நாடக எதிர்ப்பை முறியடிக்க ஓகேனக்கல்லில் அனைத்து கட்சி கூட்டம்
பெண்ணாகரம்: ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதை முறியடிக்க ஓகேனக்கல்லில் 23ம் தேதி தமிழக அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கடந்த மாதம் முதலவர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கர்நாடக பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஓகேனக்கலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ஓகேனக்கல்லில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட பாஜ விவசாய சங்கத் தலைவர் ஈஸ்வர சந்திரவசமணி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மாறுகொட்டாய் வழியாக ஓகேனக்கல் பகுதியில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் ஓகேனக்கல்லில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓகேனக்கல் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் கர்நாடக பா.ஜவினரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு ஓகேனக்கல் உரிமை பாதுகாப்பு குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கன்னட அமைப்புக்கு பதிலடி கொடுக்க ஓகேனக்கல்லில் வருகிற 23-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த உரிமை பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications