புதுவையில் புயலைக் கிளப்பும் பாஜக கோஷ்டிப் பூசல்
புதுச்சேரி: ஒரு போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெறுவது தொடர்பாக புதுவை மாநில பாஜகவில் இரு கோஷ்டிகளுக்கு நடுவே ஏற்பட்ட மோதலில், அங்கு நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த உள்கட்சி பூசல் வெடித்து வெளிக் கிளம்பியுள்ளது.
புதுச்ேசரி நகர பா.ஜ.க தலைவர் கராத்தே இளங்கோவன். தமிழகத்தைப் போன்றே புதுவையிலும் தொழில்நுட்பக் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மறியல் போராட்டம் நடத்த கட்சி சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
இதையறிந்த கட்சியின் மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன், போராட்டம் நடத்த இளங்கோவனுக்கு தரப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். கட்சிப் பதவியில் இருந்து இளங்கோவனை அதிகாரப்பூர்வமாக நீக்கிவிட்டதால் அவருக்கு இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கான அருகதை இல்லை என்றும் போலீசாரிடம் வாதிட்டார். இதையடுத்து இளங்கோவனுக்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்தார்.
இதனால் இளங்கோவன் கோஷ்டியினர் ஆத்திரமடைந்தனர். இந்தப் போராட்டத்தை நடத்தி நல்ல பெயர் வாங்கி விடுவார் என்ற பொறாமையினால்தான் போலீஸ் அனுமதியை விஸ்வேஸ்வரன் ரத்து செய்ய வைத்தார் என்று குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சாமிநாதனை போலீசாரிடம் இளங்கோவன் அழைத்துச் சென்றார். போராட்டத்தை நடத்துவதற்கு சாமிநாதன் பெயரில் போலீஸ் அனுமதியை பெற்றார்.
இதையடுத்து இளங்கோவன் கோஷ்டியினர் மறியல் போராட்டத்தை நடத்தினர். திட்டமிட்டபடியே வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி விஸ்வேஸ்வரன் கோஷ்டி முகத்தில் கரியைப் பூசியதாக இளங்கோவன் தரப்பினர் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்துள்ள விஸ்வேஸ்வரன் கோஷ்டிக்கும் இளங்கோவன் கோஷ்டிக்கும் மோதல் உருவாகும் நிலை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications