போலீஸாரை தாக்கி பைக்கை பறித்த ரவுடிகள் கைது
மதுரை: போலீஸாரை அரிவாளால் தாக்கி மோட்டார் பைக்கை பறித்து சென்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு ரவுடியை தேடி வருகின்றனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பாண்டி கண்ணன், ஆயுதப் படை காவலர் பெருமாள் ஆகிய இருவரும் கே.கே.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களை கூப்பிட்டு விசாரித்தனர்.
திடீரென அந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரை
வெட்டினர். இதில் காவலர் பெருமாளின் கை விரல்கள் துண்டானது.
பின்னர் போலீஸாரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அந்த ரவுடிக் கும்பல் தப்பிச் சென்றது. காயமடைந்த பெருமாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தப்பியோடிய அபுபக்கர் (26), இருளாண்டி (25) ஆகிய ரவுடிகள் சிக்கினர். இன்னொருவரான சந்திரன் (25) தலைமறைவாகிவிட்டார். பறிக்கப்பட்ட பைக் மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications