சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள்-விஜய்காந்த்
சென்னை: தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தொடர்கின்றன. இதில் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் உள்ள ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் பாதியில் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். அரசு நடத்தும் கிராமப் பள்ளிகள் சரியாக இயங்காததால், பெருமளவிலான பிள்ளைகள் படிப்பறிவு இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள்.
குறிப்பாக, பெண் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் இருந்து நின்று விடுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்த பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வரவும், பள்ளியை சிறப்பாக நடத்தவும் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்குபெறும் அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த சிறப்புத் திட்டமும் இல்லை.
பேறுகாலத்தின் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆயிரம் பிறப்புகளுக்கு குழந்தைகளின் இறப்பு விகிதம் 28 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று அரசே இலக்கை நிர்ணயித்தது. ஆனால் இன்றும் இது 41 ஆக உள்ளது.
பிரசவ காலத்தில் தாய்மார்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. அதே போல் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த எந்த செயல்பாடுகளும் இல்லை.
அரசு அமைக்கும் நலவாரியத்தின் மூலம் ஒரு சிலரே நன்மை பெற முடிகிறது. இது தற்காலிக நிவாரணமாகவே அமையும்.
பொதுவாக இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவைதான் தொடர்கின்றன. சில நலவாரியங்களை தவிர மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.