சோனியாவை இல்லம் தேடி சந்தித்தார் அத்வானி!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி நேரில் சந்தித்து ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நேற்று ஹோலி பண்டிகை வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாட்டின் இதர பகுதிகளிலும் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
இந்த நிலையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, சோனியா காந்தியின் இல்லத்திற்கு திடீரென்று சென்றார். அவருடன் அவரது மனைவியும் உடன் வந்தார். அத்வானியைப் பார்த்த காங்கிரஸார் வியப்படைந்தனர்.
அவரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சோனியாவுக்கு அத்வானி தம்பதியினர் ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பின்னர் சோனியாவுக்கு தான் எழுதிய மை கன்ட்ரி, மை லைப் நூலின் பிரதி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினார் அத்வானி.
சுமார் 20 நிமிடங்கள் சோனியா வீட்டில் அத்வானி இருந்தார்.
சோனியா காந்தியை அவரது இல்லத்திற்குச் சென்று அத்வானி சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
சோனியா காந்தியைத் தேடி கடந்த முறை பிரதமர் பதவி வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர் அத்வானி. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தார் அத்வானி. அவரது எதிர்ப்பு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சிலவற்றுக்கும் பரவியதால், சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்.
மேலும் சமீபத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்டார் அத்வானி. சோனியாவின் தீவிர எதிர்ப்பாளராக விளங்கும் அத்வானி, சோனியாவை அவரது வீட்டுக்குப் போய் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.